Sunday 19 July 2015

சொல்லத் தோணுது 42 - ஆள் பிடிக்கும் ஆசான்கள்!

சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய அரசு வழி தவறும்போது சமூக மும் வழி தவறிவிடுகிறது. அரசி னால் தவறாக செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்துவதோடு, ஏற் கெனவே இருக்கும் சிக்கல்களுடன் சேர்ந்து மேலும் மேலும் அது வளர்ந்து கொண்டே போய் ஒட்டுமொத்த சமுதாயத் தையும் பாதாள குழியில் தள்ளிவிடுகிறது.
அரசாங்கம் எனப்படுவது சமுதாயத் தின் அடிப்படைத் தேவைகளை செய்து தருவதை முதன்மையான கடமையாக கொண்டிருந்த வரையில் சிக்கல் இல்லை. அந்தப் பொறுப்பில் இருந்து தடம் புரண்டு, அத்தகைய பொறுப்புகளைத் தனியாரிடம் கொடுத்த பொழுதிலிருந்தே ஒன்றன்பின் ஒன்றாக சீரழியத் தொடங்கி விட்டது.
கல்லூரிகள் எனப்படுவது இந்நாட்டின் தொழில்நுட்ப ஆய்வுப் பணி, கல்விப் பணி, அரசு நிர்வாகப் பணி, மக்கள் பணி, மராமத்துப் பணி என ஒவ்வொரு துறைக் குமான வல்லுனர்களை உருவாக்கித் தருவதற்காகத்தான் தொடங்கப்பட்டன. ஆனால் இந்த நோக்கம் மாறிப்போய் கருப்புப் பணம் உள்ளவர்கள், அரசின் உயர்பொறுப்பில் இருந்தவர்களுக்கு எடுபிடி வேலை பார்த்தவர்கள், அமைச்சர் கள், அரசியல்வாதிகள், வணிகர்கள் என தன்னலத்துக்காகவே வாழ்பவர்களின் பொறுப்பில் சென்றுவிட்டன.
அரசாங்கமே நடத்திவந்த கல்வி நிலை யங்கள் இவர்கள் கைக்கு மாறியதன் விளைவு, எங்கு திரும்பினாலும் உணவ கங்கள் போல கல்லூரிகளும் மலிந்து விட்டன. நாட்டின் ஒவ்வொரு துறைக் கும், ஒவ்வொரு பணிக்கும் தேவைக்கு ஏற்ப கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு கல்லூரிகள் என்கிற பெயரில் பெரிய பெரிய கட்டிடங் களைக் கட்டிப்போட்டு, மாணவர்களை ஆள் வைத்துப் பிடிக்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் வெளியேறுகிற 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர் களில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. மீதி 10 ஆயிரம் பேர் 10 ஆயிரத்துக்கும், மீதமுள்ளவர்கள் 5 ஆயிரத்துக்கும் அல்லது அதற்கும் குறைவான சம்பளத் துக்கும், வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டும் இருக்கும் நிலையில் மேலும் மேலும் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது நிறுத்தப்படவே இல்லை.
மூன்று வயதில் இருந்து போராடி செலவழித்து கனவுகளைச் சுமந்து படிக்க வைத்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் தானும் முன்னேறி தங்களையும் காப்பாற்றுவார்கள் என நினைத்து ஏமாந்து கிடக்கிறார்கள். படித்து முடித்து வெளியேறியவர்கள் எங்கே போவது? எப்படி வேலையைப் பெறுவது என்பது புரியாமல், திக்குமுக்காடி திகைத்து நிற்கிறார்கள்.
இந்நிலையில்தான் சரியான கட்டமைப்பு வசதிகளோ, தகுதியான ஆசிரியர்களோ இல்லாத சில தனியார் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளும், சில தனியார் பல்கலைக்கழகங்களும் நாளிதழின் முதல் பக்கத்திலும், காலைத் தொடங்கி நடுஇரவு வரை தொலைக்காட்சிகளிலும் தங்கள் கல்லூரி களின் பெருமைகளென பொய்களைக் கூவிக் கூவி விளம்பரம் செய்துகொண்டே இருக்கின்றன. எத்தனைக் காலம்தான் ஏமாறுவது என பெற்றோர்களும் விழித் துக் கொண்டார்கள். பொய்யான தகவல் களும், போலியான கெடுபிடிகளும், பசப்பு வார்த்தைகளும், பிரபலங்களை அழைத்து கட்டுக் கட்டாக பணம் கொடுத்து தங்கள் கல்லூரியைப் பற்றி புகழச்சொன்ன வார்த்தைகளும் பலன் கொடுக்காமல், பல கல்லூரி முதலாளிகள் இப்போது பரிதவித்து நிற்கிறார்கள். சென்ற ஆண்டே நாற்ப துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே ஒரு மாணவர் கூட பொறியியல் படிப்பில் சேரவில்லை என்பதை ஊடகங்களின் மூலம் அறிந்திருப்போம். அப்படிப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் மாணவர்கள் இல்லாமல் காலியாக இருக்கும் எனத் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில்தான் என் வீட் டுக்கு வந்த இரண்டு கல்லூரி விரிவுரை யாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. அங்கே இங்கே ஆள் பிடித்து தான் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஒரு கல்லூரியில் பணிக்கு சேர்ந்தார் களாம். ஒவ்வொரு மாதமும் சம்பளம் கிடைக்குமோ, கிடைக்காதோ என தவிக் கும் நிலையில் சென்றவாரம் அவர்களை அழைத்து ஆளுக்கு 6 மாணவர்களை பிடித்துக்கொண்டு வராமல் வேலைக்கு வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகத் தினர் சொல்லிவிட்டார்களாம். இவர் களைப் போலவே எத்தனை ஆசிரியர் கள் இந்நேரம் இந்த ஆள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்களோ தெரிய வில்லை. சில ஆண்டுகளாகவே இத்தகைய அவலம் நடந்து வருவதாக அறிந்தபோது, அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.
இவ்வளவு கேவலமான நிலைக்கு கல்வியின் தகுதியை, தரத்தைக் கொண்டு வந்ததற்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்? அரசும், அந்தத் துறை யைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த சீர்கேட்டினை இன்னும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.
வாழ்வின் வழிகாட்டியாக முதல் நிலை யில் வைத்து போற்றக்கூடிய ஆசிரியர் களுக்கே இந்த நிலை என்றால், வெளிநாட்டு மாணவர்களை பொறி வைத்துப் பிடிக்கும் சில கல்லூரிகளில் அரங்கேறும் கேவலமான நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது.
2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படிக்கும் நம் சொந்த மாநில மாணவர்களே தங் களின் கல்லூரிச் செலவை ஈடுகட்டுவதற் காக மும்முரமாக ஆள் பிடிக்கும் பணியில் அமர்த்தப்படுவதாக அந்த விரிவுரை யாளர்கள் கூறினார்கள். அதேபோல வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாண வர்களைக் கொண்டு ஆள் பிடிக்கும் தகராறில் கொலைகள்கூட நடக்கும் அளவு இந்தக் கல்வி வணிகம் வளர்ச்சி பெற்றுள்ளது.
அவர்கள் கேட்கிற தொகையைப் கொடுத்து படிக்கலாம் என உள்ளே போனால், மாணவர்களுக்கு முறையான கல்வியை போதிப்பதில் கவனம் செலுத் தாமல் சில கல்லூரிகளில் கூடுதல் மதிப்பெண் பெறும் எல்லா வழிகளை யும் பின்பற்றி, சரிகட்டி தேர்ச்சி எண் ணிக்கையை அதிகரிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது தவிர, அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட தனியார் கல்லூரிகளில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணிக் குச் செல்லும் பேராசிரியர்கள், அரசு கல்லூரிகளின் மாணவர்களுக்கு மதிப் பெண்களை குறைத்துப் போடும் அளவுக்கு மதிகெட்டுள்ளனர்.
பாலிடெக்னிக் எனப்படும் பல்தொழில் கல்வி நிறுவனங்கள் சமுதாயத்துக்குப் பயன்படும் தொழில்நுட்ப அறிவுடன் செய்முறைக் கல்வியை அளிப்பதால் அம்மாணவர்களுக்கான வேலைவாய்ப் பில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஏட்டுக் கல்வியான பொறியியலை படித்து வரும் மாணவர்கள், தரமில்லாத கல்லூரி களில் இருந்து வெளிவருபவர்கள் பெற்றோர்களுக்கும், சமூகத்துக்கும், தாங்கள் பெரும் சுமையாக இருப்பதை எண்ணி குமைகிறார்கள். கண்ணெதிரே நம் பிள்ளைச் செல்வங்களின் வாழ்வு பொறுப்பற்றவர்களின் தன்னலத்தால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
ஆள்பவர்களோ, அடுத்ததாக ஆளப் போவதாக சொல்லிக் கொள்பவர்களோ இந்தச் சீரழிவுப் போக்கிலிருந்து நம்மை விடுவிப்பதாக பெயரளவுக்குக்கூட சொல்ல மறுக்கிறார்கள்.
அடிமைகள் போல நடத்தப்படும் இப்படிப்பட்ட ஆசிரியர்கள் வேறு வழியின்றி தங்களின் தன்னலத்துக்காக அப்படிப்பட்ட கல்லூரிகளில் மாணவர் களைத் தேடிப் பிடித்து சேர்க்க வேண்டி யிருக்கிறது. அங்கிருந்து வெளியேறும் மாணவர்களின் நிலையும் பரிதாபம். இவ்வாறு உருவாக்கப்படும் மாணவர் கள் தனது அவலத்தையே உணராமல் எப்படி சமூக அவலங்களை எதிர்த்துப் போராடப் போகிறார்கள்?
சமூகத்தின் சிக்கல்கள் இத்தகைய மோசமான கல்வி நிறுவனங்களால்தான் உருவாகின்றன. உண்மை விவரங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க எவரும் இங்கு அஞ்சுகின்றனர். இதனை வெளிப்படுத்த வேண்டிய ஊடகங் களும் தங்களுக்கு விளம்பரங்கள் கிடைத்தால் போதும் என ஒதுங்கிக் கொள்கின்றன. விமர்சனப் பார்வையில் தவறுகளை சுட்டிக் காட்டுவதுகூட தவறாகவே இங்கு கருதப்படுகிறது.
அரசும், கல்வியாளர்களும்,அதன் கண்காணிப்பாளர்களும் தற்கால அமைப்பில் உள்ள பல்வேறு குறைபாடு களை ஆராய்ந்து, வருங்காலத் தலை முறையையாவது சிறப்பாக உருவாக்கத் திட்டமிட வேண்டும். கல்வி எனும் ஆற்றில் தொடக்கத்தில் ஊறி வரும் தண்ணீரே சாக்கடையாக வந்தால்… அதைக் கொண்டு வேளாண்மை செய்து விளை விக்கும் பொருட்கள் எப்படிப்பட்டதாக இருக்குமோ, அப்படித்தான் இந்தச் சமுதாயமும் இருக்கும்.

- சொல்லத் தோணுது...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

No comments:

Post a Comment