Wednesday 29 July 2015

ஐயா அப்துல் கலாம் அவர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். பத்தாவது நிமிடத்திலேயே உடனே நேரம் ஒதுக்கி ஒருமணி நேரத்திலேயே புறப்பட்டு வரச்சொல்லி பதில் வந்தது. .குடியரசுத்தலைவர் மாளிகையில்தான் சந்தித்தேன்.எனக்கு ஒதுக்கப்பட்டது பத்து நிமிடங்கள்தான். ஆனால்,சந்திப்பு முடிந்து வெளியில் வரும்போது 52 நிமிடங்கள் இருவரும் பேசியிருந்ததாக ஐயாவின் உதவியாளர் சொன்னார். 
முதல்முறை பதவியேற்று இரண்டுமாத காலம் ஆகியிருந்த வேளை அது . தமிழ் சமூகத்தின் தேவைகள், சிக்கல்கள் ,எதிர்காலம் குறிப்பாக தமிழ் ஈழம்,அணு உலை குறித்த எனது கவலைகளைத் தெரிவித்தேன்.தமிழன் என்கிற முறையில் நான் அவரிடம் எடுத்துக்கொண்ட உரிமைகளை அவர் நன்றாகவே புரிந்து கொண்டு வழி அனுப்பினார்.
மீண்டும் அவரை நான் சந்திக்கவே இல்லை.முயற்சிக்கவும் இல்லை!அன்று நான் அவரிடம் எழுப்பிய கேள்விகளும்,அவரின் பதிலும் நினைவிலிருந்து என்றும் நீங்காதவைகள்.
ராமேஸ்வரத்தில் அவர் பயின்ற தொடக்கப்பள்ளியின் முன்னால் நான்கு சிறுவர்களும்,சிறுமியரும் ஏழ்மை நிலையில் அழுக்கான ஆடைகளுடன் நின்றிருந்த நான் பிடித்தப் படமொன்றையும்,நான் எழுதிய நூல்களையும் கொடுத்தேன். அந்தப்படம் குறித்து நான் சொன்னதைக்கேட்டு அவர் இமைகொட்டாமல் அதையே பார்த்திருந்ததையும் அவரது உணர்ச்சிகளையும் இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன்.
உயர்ந்த மனிதரின் எளிமையும்,பண்பும் என்றும் என்னிலிருந்து அகலாதவைகள்.

Sunday 26 July 2015

சொல்லத் தோணுது 44 - கொண்டாட்டம் யாருக்கு?

இன்னும் மூன்று வாரங்களில் நாம் விடுதலை பெற்றதற்கான 68-ம் ஆண்டு கொண்டாட்டத்தைக் கொண்டாடி மகிழப் போகிறோம். நாம் எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள்தான். ஆனால், 56 சதவீத மன்னர்களுக்கு (மக்களுக்கு) சொந்த வீடுகூட இல்லை. குருவிகளுக்காவது தங்கிக்கொள்ள கூடுகள் இருக்கின்றன. மனித இனம் காட்டுமிராண்டிகளாக இருந்து, மனிதர் களாகப் பரிணமித்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும்கூட இன்னும் வீடுகள் இல்லாமல் வீதிகளிலும், மரத் தடிகளிலும் வாழ்வதைப் பற்றி இங்கே யாருக்கும் கவலையில்லை. இந்நிலை யில் ‘இந்தியா ஏழைநாடு’ என சொல் லிக் கொள்ளவும் மறுக்கிறது. அத்துடன் வெட்கமே இல்லாமல் பணக்கார நாடு களில் ஒன்றாகக் காட்டிக் கொள்ளவும், வல்லரசு நாடாகத் தன்னை பறைசாற்றிக் கொள்ளவும் படாதபாடுபடுகிறது.
இப்போதே இந்தக் குடிமகன்களின் நிலை இதுவென்றால், எதிர்காலத்தில் பிறக்கப் போகும் தலைமுறை எப்படி வாழப் போகிறதோ?
ஒருபக்கம், நாள் முழுக்க உழைத்து நமக்கெல்லாம் உணவளித்து, சுகமாக வாழ்வதற்கு வீடுகளை கட்டிக் கொடுத்து, விரைந்து செல்ல சாலைகளை அமைத் துக் கொடுத்துவிட்டு வீதியோரம் படுத்துக் கொள்ளும் மக்களும்; உழைத்த பணத்தில் பாதி பணத்தை வீட்டு வாடகைக்குக் கொடுத்துவிட்டு, வாழ்க்கைத் தேவைகளை சுருக்கிக் கொண்டு தினம்தினம் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களும் மிகுதியாக இருக்கும் நாடு இது.
மற்றொரு பக்கம், ஆட்களே இல்லாத ஆண்டுக்கொரு முறையோ, இரண்டு முறையோ சில நாட்கள் மட்டும் தங்கும் பல ஆயிரம் சதுர அடிகளைக் கொண்ட அரண்மனை வீடுகள்; இரண்டுபேர் மட்டுமே வாழ்வதற்கு பலமாடி வீடுகள்; ஆட்களே இல்லாமல் அடைத்து மூடி வைத்திருக்கும் வீடுகளும் இருக்கின்றன.
ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு இல்லாத நிலையில், ஒரே குடும்பத்துக்கு 10 வீடுகள் இங்கே வைத்துக்கொள்ளலாம். பணம் இருந்தால் எந்த வீட்டையும், எத்தனை வீட்டையும் வாங்கி பூட்டி வைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ் நாளில் ஒரு சொந்தவீடு என்பதுதான் பெருங்கனவு. சிலருக்கு மட்டுமே பலப் போராட்டங்களுக்கு இடையில் அது நிறைவேறிவிடுகிறது. ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கிற விலையும், நிம்மதி இழப்பும் வாழ் நாள் முழுக்க அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வாழ் நாளின் இறுதிவரை வாடகை வீட்டி லேயே வாழ்பவர்களின் நிலை எல்லா வற்றையும்விடக் கொடியது. பல லட்சங்கள் செலவழித்து இடம் வாங்கி, அதேபோல் இன்னும் பல லட்சங்கள் செலவழித்து வீட்டை உருவாக்கி, அந்த வீட்டை சில ஆயிரத்துக்கு வாடகைக்குத் தருபவர்களின் நிலை இன்னும் மோசம். சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்டு கடன்பட்டு ஒவ்வொரு நாளும் உறக்கத்தை இழந்தவர்களும் கணக்கிலடங்காதவர்கள்.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நம்மவர்கள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு உழைத்து, உறவுகளைப் பிரிந்து சேமித்தப் பணத்தில் மற்றவர் களுக்குத் தெரிய வேண்டும் என்பதற் காகவே கொண்டுவந்த பணத்தையெல் லாம் செலவழித்து, மாடி வீட்டைக் கட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.
எழுத்துப் பணிக்காக அண்மையில் இரண்டு வாரங்கள் கொடைக்கானல் சென்று தங்கினேன். அமைதியான இடம் தேடி அலைந்தபோது எல்லா திசைகளிலும், எல்லா மலைகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் வீடுகள். நகரமே பரவாயில்லை என்றிருந்தது. புதுமையாக இருக்க வேண்டும் என்பதற் காக பாறைகளை உடைத்து அதில் வீட்டை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழர்களின் தொழில்நுட்ப அறிவை அங்கேதான் பார்க்க முடிகிறது. எப்படிப்பட்ட மலைக்கும் சாலை கள் அமைத்து கார்களை வீட் டுக்கு முன் நிறுத்தும் வசதியை உருவாக்கிவிடுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான வீடுகள் மலை களின் சரிவில் தொங்கிக் கொண்டி ருக்கின்றன. எங்கு திரும்பினாலும் வீடு கட்டும் பணிகளும், சாலை அமைக் கும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவற்றை அமைப்பதற்கான ஒவ்வொரு மூலப் பொருளும், கட்டுமான பொருட் களும் கீழேயிருந்துதான் கொடைக் கானலுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காக நூற்றுக்கணக்கான லாரிகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.
நாள்தோறும் வேளாண்மை செய்து கொண்டிருக்கும் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வீட்டுமனை களாக வேறொரு கைக்கு மாறிக் கொண்டே இருக்கின்றன. சிறுசிறு துண்டு நிலங்களை அதிக விலைக்குக் கொடுத்துவிட்டு அம்மண்ணின் மைந் தர்கள் ஆளுக்கொரு கார் வாங்கி ஊர்ச் சுற்றிவிட்டு ஆறே மாதத்தில் அனைத்தையையும் இழந்து, மதுக்கடை வாசலில் மதியிழந்து கிடக்கிறார்கள்.
தன்னைப் பண வசதி படைத்தவன் எனக் காட்டிக்கொள்வதற்காகவும், பேரப் பிள்ளைகள் மலைக் குளிர்ப் பிரதேசங்களில் தங்களுக்கு ஒரு வீடு இல்லையா என கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் மட்டுமே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் இப்படிப்பட்ட வீடுகள் கட்டப்படுகின்றன. நூற்றுக்குத் தொண் ணூத்தைந்து வீடுகளில் ஒரே ஒரு வீட்டில் கூட உரிமையாளர் தங்குவது இல்லை. ஆண்டுக்கு இரண்டு முறை ஒரு வார காலம் வந்து குடும்பத்துடன் தங்கினாலே பெரிய காரியம். மற்ற நாட்களில் ஆண்டு முழுக்க வீடுகள் பூட்டியே கிடக்கின்றன.
இங்கே அரசியல் தொடர்புடைய, அதிகாரங்களில் இருக்கக்கூடிய, பிற துறைகளில் அங்கம் வகிக்கக்கூடிய அனைத்துப் பணக்காரர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் என அனைவருக் குமே அங்கே இடமும், வீடும் உண்டு.
நம் நாட்டின் பெருங்கொடைகளாக இருக்கிற இவைபோன்ற மலைப் பிரதேசங்களின் இயற்கை வளங்களும், இயற்கை அமைப்பும் விதி மீறப் பட்டு ஒவ்வொரு மணி நேரமும் அழிந்துகொண்டே இருக்கிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வருமானம் வருகிறது என்பதற்காக இப்படிப்பட்ட இடங்கள் வணிகமயமாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, இயற்கைக்கு மாறாக அழிந்துகொண்டே இருக்கின்றன. கொடைக்கானலில் இருந்து 6 கி.மீ. தள்ளி யிருந்த சிற்றூரில்தான் நான் தங்கியிருந் தேன். ஆழ்துளை கிணறுகளை அமைக் கக்கூடாது என விதியிருந்தும் கிராம நிர்வாக அதிகாரிகளின் துணையுடன் நகர வளர்ச்சித் துறையின் ஒப்புதலுடன் நாள்தோறும் மலைகள் குடையப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை வந்து தங்கப் போகும் செல்வந்தர்களுக்காக ஆழ் துளை கிணறு உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இயற்கையின் அழுகை யாருக்குமே தெரியவில்லை. யார் யாரெல்லாம் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மேசையைத் தட்டித் தட்டி சட்டத்தை உருவாக்கினார்களோ… அவர்களா லேயே, அவர்களின் துணையுடனேயே கண்முன் இயற்கை அழிக்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளிலேயே கோயம் புத்தூர் போலவே ஊட்டியும், திண்டுக்கல் போலவே கொடைக்கானலும், சேலம் போலவே ஏற்காடும் மாறிவிடும். காலம் முழுக்க உழைப்பவனுக்கு இங்கே வீடும் இல்லை; உழைத்து வாழ நிலமும் இல்லை. ஆனால், பணத்தை என்ன செய்வதென்று தெரியாதவர்களுக்கு கணக்கில்லாத வீடுகளும்; உல்லாசத் துக்காகப் பொழுதைக் கழிப்பவர் களுக்கு நூற்றுக்கணக்கில் ஏக்கர் தோட் டங்களும் உள்ள நாடுதான் நம் நாடு.
‘ஒருவர் பெயரில் ஒரு வீடுதான், அதற்குமேல் இருந்தால் அது அரசுக்கு சொந்தம்’ எனும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து அனைவருக்கும் வீடு கிடைக்க வழிவகை செய்யும் அன்றைக்குத்தான் இது சுதந்திர இந்தியா. அப்போதுதான் வீடு இல்லாத இம்மக்களுக்கும் சுதந்திரக் கொண்டாட்டம். அதுவரை, எம்மக்களுக்கு ‘ஆகஸ்ட் 15’ ஒரு விடுமுறை நாள்தான்!

- சொல்லத் தோணுது...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

Sunday 19 July 2015

சொல்லத் தோணுது 43 - நெஞ்சு பொறுக்குதில்லையே!

திரைப்படங்களைத் தரக் குறைவாக நினைப்பவர்களும், சினிமா பிடிக்காது என்பவர்களும் தொடர்ந்து கேட்டு ரசிப்பது திரைப்படப் பாடலைத் தான். என்னைப் போன்ற பலருக்கு உணவாக, உயிராக இருப்பது பழைய திரைப்படப் பாடல்களே. அந்தப் பாடல்களில் என்னதான் இருந்தது? மனதை மயக்கும் இசை, சிந்தனையைக் கிளரும் வரிகள், மனதை வட்டமிடும் மெட்டுக்கள், திரும்பத் திரும்ப முணுமுணுக்க வைக்கும் ராகங்கள் என எல்லாமும் இருந்தன.
ஒவ்வொரு பாடலிலும் புதிய புதிய வடிவங்கள், புதிய இசை, புதிய ராகம், புதிய மெட்டு, புதுப் புது வரிகள், அதற்கும் மேலாக புதியப் புதிய குரல்கள். இவையெல்லாம் எப்படி சாத்தியமோ என ஆச்சர்யத்தில் தலை சுற்றும். அரசுப் பேருந்தில் நடத்துநராக அல்லாடிக் கொண்டிருக்க வேண்டிய என்னை, இழுத்துக் கொண்டு வந்ததே திரைப்படப் பாடல்கள்தான்!
இதற்கெல்லாம் மூலக் காரணம் எது? எம்.எஸ்.விஸ்வநாதன் என்னும் மன்னர்தான் அதற்கு மூலக் காரணமாக இருந்திருக்கிறார். இளமைப் பருவத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனாக இருந்த நான் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் படங்களைப் புழுப் பூச்சாகக் கூட மதிக்க மாட்டேன். இவர்களின் படங்களைப் பார்த்தவர்களின் பக்கத்தில்கூட உட்காரக் கூடாது என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்த தால், பல சிறந்த படங்களைப் பார்க்காமல் இப்போது அதனை நினைத்து ஏங்கும் பாவி நான். என்னை மயக் கிய பல பாடல்கள் இவர்கள் நடித் தப் படங்களாக இருந்துவிடும். அப்போ தெல்லாம் இந்த மெட்டுக்கள் எம்.ஜி.ஆர் படத்துக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. அதைத் திருடித்தான் இவர்கள் தங்கள் படத்தில் வைத்துக் கொண்டார்கள் என நான் கூறியதை நம்புவதற்கும் அப்போது நண்பர்கள் இருந்தார்கள்.
திரைப்படத் துறையில் இருப்பவர்களில் ‘இவர் தமிழர், இவர் மலையாளி, இவர் தெலுங்கர்’ என்று மற்றவர்கள் சொல்லும்போது, அதே பார்வைதான் என்னிடமும் அப்போது இருந்தது. பின்பு தான் தெரிந்தது பாடல் எழுதுபவர்கள், நகைச்சுவை நடிகர்கள் என சிலரைத் தவிர, பெரும்பாலும் மற்ற மொழிக்காரர்கள்தான் என்பது. அவ்வாறு பார்ப்பது மடமையானது என்பதும் பின்புதான் புரிந்தது. நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என எல்லோருமே மற்ற மொழிக்காரர்களாக இருந்து, அது தமிழ்ப் படங்களாகவும், சிறந்த படங்களாகவும் இருந்த பட்டியல்தான் அதிகம்.
இரண்டு மாதங்களாகவே எம்.எஸ்.வி யைப் போய் நேரில் பார்க்க வேண்டும். அவரோடு ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அது நிராசையாகவே முடிந்துவிட்டது. எப்போதும் என் கைப்பேசியில் சேமித்து வைத்திருக்கும் அவருடைய தனித்துவமான பாடல்களைக் கேட்டுக் கொண்டே தான் எழுதுவது வழக்கம். அவரது இறப்புச் செய்தி அறிந்ததும் எழுதிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு அப்படியே கண்ணீர் சிந்திக் கொண்டேயிருந்தேன்.
நான் சோர்வடைந்து, மனமுடைந்து போகும்போதெல்லாம் என்னைத் தொடர்ந்து இயக்குபவை அவர் இசை யமைத்தப் பாடல்களே. அவ்வளவு திறமை ஒரு மனிதனுக்கு சாத்தியமா எனத் தெரியவில்லை. ஏளனம், நையாண்டி, வீராப்பு, பெருமை, தன்னம்பிக்கை, தோல்வி, சகோதர உணர்ச்சி, நட்பு, பாசம், உல்லாசம், வீரம், தாய்மை, சோகம், ஏமாற்றம் என எந்த உணர்ச்சியில் பாடல் அமைத்தாலும் அதில் தனித்துவம் படைத்தவர் ஐயா எம்.எஸ்.வி!
இப்போது வரும் பாடல்கள் எனச் சொல்லக் கூடியவைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரே சூழ்நிலை. ஒரே உணர்ச்சி. ஒரு பாடலை எந்தப் படத்திலும் ஒட்டிக் கொள்ளலாம். யாரும் நடிக்கலாம், யாரும் வாயசைக்கலாம்.
எம்.எஸ்.வியின் பாடல்களை இப் போதெல்லாம் நான் கேட்பதோடு நிறுத்தி வருகிறேன். பழைய பாடல்களை ஒளிபரப்பும் பல தொலைக்காட்சிகள் இன்று இயங்குகின்றன. அவற்றில் ஒரு சில பாடல்களைத் தவிர, பல பாடல்களுக்கு நடித்த விதம், படமாக்கிய விதம், நடனம் அமைத்த விதம் போன்றவற்றைப் பார்க்கிறபோது, நான் உயிராக நினைத்த அந்தப் பாடல்களை மீண்டும் கேட்க வேண்டுமா எனத் தோன்றுகிறது. அந்தப் பாடலின் தரத்துக்கு, உழைப்புக்கு இணையாக நடிகர்களும், இயக்குநர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கலும் ஈடுபாட்டுடன் உழைக்காமல் படமாக்கப்பட்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. எம்.எஸ்.வி. என்னும் குதிரை யின் மேல்தான் மேற்சொன்ன அத்தனைப் பேரும் பயணித்திருக்கிறார்கள்.
நெடுந்தொலைவில் வெளியூரில் இருந்துவிட்டதால் எம்.எஸ்.வியின் முகத்தை என்னால் கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போன குற்ற உணர்ச்சி இருந்து கொண்டேயிருக் கிறது. கண்ணதாசன், வாலி போன்ற நம் உடைமைகளாகிப் போன நான் வணங்கும் கவிஞர்களின் பாடல் வரிகள் எம்.எஸ்.வி இல்லாமல் போயிருந் தால், அந்தப் பாடல்களெல்லாம் இந்த அளவுக்கு கொண்டாடப் பட்டிருக்காது.
இத்தகைய சிறப்புவாய்ந்த அவ ரின் இறுதிச் சடங்கையும், இரங்கல் தெரிவிப்பவர்களையும், அவரின் வாழ்க் கைக் குறிப்புகளையும், பாடல் காட்சி களையும் தொலைக்காட்சிகளில் காண் பிப்பதும், பத்திரிகைகளில் வெளியிட்டு விட்டால் மட்டும் போதும் என நினைக் கிறோம்.
அண்மைக்காலமாக திரைப்படத் துறையினரைச் சார்ந்தவர்களின் இறப்பை தொலைக்காட்சிகள் நேரலை செய்வதும், அதைப் பார்த்துவிட்டு பிரபலங்களும், மக்களும் அங்கே திரள்வதும் கூடிக் கொண்டேயிருக் கிறது. இப்படிப் பட்ட நேரங்களில் தங்களி்ன் இருப்பைக் காட்டிக் கொள்பவர்களும், மக்களுக்குத் தெரிந்த புகழ்பெற்ற முகங்களைக் காட்டி அதன் மூலம் பணம் பண்ணுபவர்களும் இருக்கிறார்கள்.
இறந்துபோன சாதனையாளர்களின் ஆளுமைத் திறனை, பங்களிப்பை, சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங் களைச் சொல்லி, அவை தொடர் பான காட்சிகளை திறனாய்வாளர் களைக் கொண்டு மக்களுக்கு வெளிப் படுத்துவதுதான் ஊடகங்களின் முதற் பணி. அதனை விட்டுவிட்டு பிரபல மானவர்கள் என்கிற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, திரும்பத் திரும்ப அவரைப் பற்றிய புகழுரைகளை மட்டுமே எல்லோரும் சொல்வதை காண்பிப்பதால் சமுதாயத்துக்கு எந்தப் பயனும் இல்லை. மரண வீட்டில் கேமராவை நிற்கவைத்து, அங்கு வருவோர் போவோரை நேரலையில் காண்பிப்பதாலும், அவர்கள் பங்குபெற்ற படத்தின் பாடல் காட்சிகளை ஒளிபரப்பு வதாலும் யாரோ சிலருக்கு மட்டும்தான் லாபம்.
பல திரைப்பட ஆளுமைகளின் மரணம் ஊடகத்தினரால் கண்டுகொள் ளப்படவே இல்லை. அதனால் அந்த ஆளுமைகளின் பங்களிப்பு உலகத்துக்கு தெரியாமலே போய்விடுகிறது. அஞ்சலி செலுத்த புகழ்பெற்ற நடிகர்களும், அரசியல்வாதிகளும் வருகிறார்கள் என்றால் ஊடகத்தினர் அங்கே ஓடு கிறார்கள். புகழ்பெற்ற நடிகர்களும், அரசி யல்வாதிகளும் அஞ்சலி செலுத்த செல்ல வில்லை என்றால் அக்கலைஞர்களின் மரணம், அவர்கள் வாழ்நாள் முழுக்க தன்னை ஒப்படைத்த திரைத்துறைக்கே தெரிவதில்லை. இவ்வளவு பெரிய, காலத் தால் வாழும் ஒரு திரைக் கலைஞனின் பெயர் அவரது இறப்புக்குப் பின்புதான் ஊடகங்களில் இந்த அளவுக்கு வெளியிடப் படுகிறது.
கிராமங்களில் சிலரின் மரணத் துக்காக சிலர் காத்திருப்பார்கள். இறந்த வுடன் புதுத் துணி கிடைக்கும், உறவினர்கள் பணம் வைப்பார்கள் கறி விருந்து கிடைக்கும் என்கிற காரணத்துக்காக. அதுபோலதான் இது போன்ற சந்தர்ப்பங்களில் சிலரது செயல்பாடும் தொடர்கிறது.
ஒரு சாதனையாளரின் உடல் நலிவு சேதி தெரியவரும்போதே, முன்கூட்டியே அவர்கள் குறித்த விவரங்களை, ஆய்வுகளை வெளிக் கொண்டுவருவதுதான் சமுதாயத்தின் நான்குத் தூண்களில் ஒன்றாக இருக்கும் ஊடகத் தூணின் முதல் பணியாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

- சொல்லத் தோணுது...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

சொல்லத் தோணுது 42 - ஆள் பிடிக்கும் ஆசான்கள்!

சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய அரசு வழி தவறும்போது சமூக மும் வழி தவறிவிடுகிறது. அரசி னால் தவறாக செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்துவதோடு, ஏற் கெனவே இருக்கும் சிக்கல்களுடன் சேர்ந்து மேலும் மேலும் அது வளர்ந்து கொண்டே போய் ஒட்டுமொத்த சமுதாயத் தையும் பாதாள குழியில் தள்ளிவிடுகிறது.
அரசாங்கம் எனப்படுவது சமுதாயத் தின் அடிப்படைத் தேவைகளை செய்து தருவதை முதன்மையான கடமையாக கொண்டிருந்த வரையில் சிக்கல் இல்லை. அந்தப் பொறுப்பில் இருந்து தடம் புரண்டு, அத்தகைய பொறுப்புகளைத் தனியாரிடம் கொடுத்த பொழுதிலிருந்தே ஒன்றன்பின் ஒன்றாக சீரழியத் தொடங்கி விட்டது.
கல்லூரிகள் எனப்படுவது இந்நாட்டின் தொழில்நுட்ப ஆய்வுப் பணி, கல்விப் பணி, அரசு நிர்வாகப் பணி, மக்கள் பணி, மராமத்துப் பணி என ஒவ்வொரு துறைக் குமான வல்லுனர்களை உருவாக்கித் தருவதற்காகத்தான் தொடங்கப்பட்டன. ஆனால் இந்த நோக்கம் மாறிப்போய் கருப்புப் பணம் உள்ளவர்கள், அரசின் உயர்பொறுப்பில் இருந்தவர்களுக்கு எடுபிடி வேலை பார்த்தவர்கள், அமைச்சர் கள், அரசியல்வாதிகள், வணிகர்கள் என தன்னலத்துக்காகவே வாழ்பவர்களின் பொறுப்பில் சென்றுவிட்டன.
அரசாங்கமே நடத்திவந்த கல்வி நிலை யங்கள் இவர்கள் கைக்கு மாறியதன் விளைவு, எங்கு திரும்பினாலும் உணவ கங்கள் போல கல்லூரிகளும் மலிந்து விட்டன. நாட்டின் ஒவ்வொரு துறைக் கும், ஒவ்வொரு பணிக்கும் தேவைக்கு ஏற்ப கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு கல்லூரிகள் என்கிற பெயரில் பெரிய பெரிய கட்டிடங் களைக் கட்டிப்போட்டு, மாணவர்களை ஆள் வைத்துப் பிடிக்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் வெளியேறுகிற 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர் களில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. மீதி 10 ஆயிரம் பேர் 10 ஆயிரத்துக்கும், மீதமுள்ளவர்கள் 5 ஆயிரத்துக்கும் அல்லது அதற்கும் குறைவான சம்பளத் துக்கும், வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டும் இருக்கும் நிலையில் மேலும் மேலும் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது நிறுத்தப்படவே இல்லை.
மூன்று வயதில் இருந்து போராடி செலவழித்து கனவுகளைச் சுமந்து படிக்க வைத்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் தானும் முன்னேறி தங்களையும் காப்பாற்றுவார்கள் என நினைத்து ஏமாந்து கிடக்கிறார்கள். படித்து முடித்து வெளியேறியவர்கள் எங்கே போவது? எப்படி வேலையைப் பெறுவது என்பது புரியாமல், திக்குமுக்காடி திகைத்து நிற்கிறார்கள்.
இந்நிலையில்தான் சரியான கட்டமைப்பு வசதிகளோ, தகுதியான ஆசிரியர்களோ இல்லாத சில தனியார் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளும், சில தனியார் பல்கலைக்கழகங்களும் நாளிதழின் முதல் பக்கத்திலும், காலைத் தொடங்கி நடுஇரவு வரை தொலைக்காட்சிகளிலும் தங்கள் கல்லூரி களின் பெருமைகளென பொய்களைக் கூவிக் கூவி விளம்பரம் செய்துகொண்டே இருக்கின்றன. எத்தனைக் காலம்தான் ஏமாறுவது என பெற்றோர்களும் விழித் துக் கொண்டார்கள். பொய்யான தகவல் களும், போலியான கெடுபிடிகளும், பசப்பு வார்த்தைகளும், பிரபலங்களை அழைத்து கட்டுக் கட்டாக பணம் கொடுத்து தங்கள் கல்லூரியைப் பற்றி புகழச்சொன்ன வார்த்தைகளும் பலன் கொடுக்காமல், பல கல்லூரி முதலாளிகள் இப்போது பரிதவித்து நிற்கிறார்கள். சென்ற ஆண்டே நாற்ப துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே ஒரு மாணவர் கூட பொறியியல் படிப்பில் சேரவில்லை என்பதை ஊடகங்களின் மூலம் அறிந்திருப்போம். அப்படிப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் மாணவர்கள் இல்லாமல் காலியாக இருக்கும் எனத் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில்தான் என் வீட் டுக்கு வந்த இரண்டு கல்லூரி விரிவுரை யாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. அங்கே இங்கே ஆள் பிடித்து தான் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஒரு கல்லூரியில் பணிக்கு சேர்ந்தார் களாம். ஒவ்வொரு மாதமும் சம்பளம் கிடைக்குமோ, கிடைக்காதோ என தவிக் கும் நிலையில் சென்றவாரம் அவர்களை அழைத்து ஆளுக்கு 6 மாணவர்களை பிடித்துக்கொண்டு வராமல் வேலைக்கு வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகத் தினர் சொல்லிவிட்டார்களாம். இவர் களைப் போலவே எத்தனை ஆசிரியர் கள் இந்நேரம் இந்த ஆள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்களோ தெரிய வில்லை. சில ஆண்டுகளாகவே இத்தகைய அவலம் நடந்து வருவதாக அறிந்தபோது, அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.
இவ்வளவு கேவலமான நிலைக்கு கல்வியின் தகுதியை, தரத்தைக் கொண்டு வந்ததற்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்? அரசும், அந்தத் துறை யைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த சீர்கேட்டினை இன்னும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.
வாழ்வின் வழிகாட்டியாக முதல் நிலை யில் வைத்து போற்றக்கூடிய ஆசிரியர் களுக்கே இந்த நிலை என்றால், வெளிநாட்டு மாணவர்களை பொறி வைத்துப் பிடிக்கும் சில கல்லூரிகளில் அரங்கேறும் கேவலமான நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது.
2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படிக்கும் நம் சொந்த மாநில மாணவர்களே தங் களின் கல்லூரிச் செலவை ஈடுகட்டுவதற் காக மும்முரமாக ஆள் பிடிக்கும் பணியில் அமர்த்தப்படுவதாக அந்த விரிவுரை யாளர்கள் கூறினார்கள். அதேபோல வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாண வர்களைக் கொண்டு ஆள் பிடிக்கும் தகராறில் கொலைகள்கூட நடக்கும் அளவு இந்தக் கல்வி வணிகம் வளர்ச்சி பெற்றுள்ளது.
அவர்கள் கேட்கிற தொகையைப் கொடுத்து படிக்கலாம் என உள்ளே போனால், மாணவர்களுக்கு முறையான கல்வியை போதிப்பதில் கவனம் செலுத் தாமல் சில கல்லூரிகளில் கூடுதல் மதிப்பெண் பெறும் எல்லா வழிகளை யும் பின்பற்றி, சரிகட்டி தேர்ச்சி எண் ணிக்கையை அதிகரிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது தவிர, அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட தனியார் கல்லூரிகளில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணிக் குச் செல்லும் பேராசிரியர்கள், அரசு கல்லூரிகளின் மாணவர்களுக்கு மதிப் பெண்களை குறைத்துப் போடும் அளவுக்கு மதிகெட்டுள்ளனர்.
பாலிடெக்னிக் எனப்படும் பல்தொழில் கல்வி நிறுவனங்கள் சமுதாயத்துக்குப் பயன்படும் தொழில்நுட்ப அறிவுடன் செய்முறைக் கல்வியை அளிப்பதால் அம்மாணவர்களுக்கான வேலைவாய்ப் பில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஏட்டுக் கல்வியான பொறியியலை படித்து வரும் மாணவர்கள், தரமில்லாத கல்லூரி களில் இருந்து வெளிவருபவர்கள் பெற்றோர்களுக்கும், சமூகத்துக்கும், தாங்கள் பெரும் சுமையாக இருப்பதை எண்ணி குமைகிறார்கள். கண்ணெதிரே நம் பிள்ளைச் செல்வங்களின் வாழ்வு பொறுப்பற்றவர்களின் தன்னலத்தால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
ஆள்பவர்களோ, அடுத்ததாக ஆளப் போவதாக சொல்லிக் கொள்பவர்களோ இந்தச் சீரழிவுப் போக்கிலிருந்து நம்மை விடுவிப்பதாக பெயரளவுக்குக்கூட சொல்ல மறுக்கிறார்கள்.
அடிமைகள் போல நடத்தப்படும் இப்படிப்பட்ட ஆசிரியர்கள் வேறு வழியின்றி தங்களின் தன்னலத்துக்காக அப்படிப்பட்ட கல்லூரிகளில் மாணவர் களைத் தேடிப் பிடித்து சேர்க்க வேண்டி யிருக்கிறது. அங்கிருந்து வெளியேறும் மாணவர்களின் நிலையும் பரிதாபம். இவ்வாறு உருவாக்கப்படும் மாணவர் கள் தனது அவலத்தையே உணராமல் எப்படி சமூக அவலங்களை எதிர்த்துப் போராடப் போகிறார்கள்?
சமூகத்தின் சிக்கல்கள் இத்தகைய மோசமான கல்வி நிறுவனங்களால்தான் உருவாகின்றன. உண்மை விவரங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க எவரும் இங்கு அஞ்சுகின்றனர். இதனை வெளிப்படுத்த வேண்டிய ஊடகங் களும் தங்களுக்கு விளம்பரங்கள் கிடைத்தால் போதும் என ஒதுங்கிக் கொள்கின்றன. விமர்சனப் பார்வையில் தவறுகளை சுட்டிக் காட்டுவதுகூட தவறாகவே இங்கு கருதப்படுகிறது.
அரசும், கல்வியாளர்களும்,அதன் கண்காணிப்பாளர்களும் தற்கால அமைப்பில் உள்ள பல்வேறு குறைபாடு களை ஆராய்ந்து, வருங்காலத் தலை முறையையாவது சிறப்பாக உருவாக்கத் திட்டமிட வேண்டும். கல்வி எனும் ஆற்றில் தொடக்கத்தில் ஊறி வரும் தண்ணீரே சாக்கடையாக வந்தால்… அதைக் கொண்டு வேளாண்மை செய்து விளை விக்கும் பொருட்கள் எப்படிப்பட்டதாக இருக்குமோ, அப்படித்தான் இந்தச் சமுதாயமும் இருக்கும்.

- சொல்லத் தோணுது...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

சொல்லத் தோணுது 41 - தலை தப்புமா?

என்னதான் வெளிநாடுகளைப் புகழ்ந் தாலும் நம் நாடு போலாகுமா? கட்டுப் பாடுகளுடன் சட்டத்தை மதித்து வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அயல்நாடுகளில் எந்நேரமும் அரசாங் கம் கண்காணிப்பு கேமரா வைத்து கவனித்துக்கொண்டே இருக்கிறது. உறங்குகிற நேரம் மட்டும்தான் அரசின் சட்டவிதிகளை மறந்து உறங்கு கிறார்கள். எந்த ஓர் இடத்தை சேதப் படுத்துவதோ, கண்ணில் படும் இடங் களில் எல்லாம் விளம்பரங்களையும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக் கும் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களையும், பட்டங்கள் சூட்டிக் கொண்ட பெயரையும் எழுதிவைக்க முடியாது. அதேபோல் காணும் இடங் களில் எல்லாம் எச்சிலைத் துப்பி குப்பை களை வீச முடியாது. தனி ஆளாக சாலையில் இருந்தாலும் நடு இரவு 2 மணிக்குக் கூட சாலை விதிகளைப் பின்பற்றியாக வேண்டும். இதுதான் வல்லரசு நாடுகளிலும் அல்லது வளரும் நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.
அரசாங்கமோ, சட்டமோ நம்மவர் களை கட்டுப்படுத்துவது நமக்குப் பிடிப் பதில்லை. வீட்டில் உள்ளக் குப்பையை வெளியில் வீசிவிட்டு, கதவை மூடிக்கொண்டால் சுத்தமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். பொது இடங்களையும், பொது சொத்துகளையும் நம்முடையவை களாகப் பராமரிக்கும் எண்ணம் நமக்கு எப்போதுமே இல்லை. நமக்காகவே வாழ்வதாகவே சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகளும் இதனைக் கடை பிடிப்பது இல்லை.
உலகத்துக்கே முன்னுதாரணமாக இருக்கக் கூடிய ‘திருக்குறள்' உரு வாகக் காரணமாக இருந்த இந்த இனம், அதற்கு நேர்மாறாக எல்லா நெறிமுறைகளையும் பின்பற்றாமல், மற்றவர்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் நமது மக்கள் தொகைப் பெருக்கம் எனச் சொல்லி தப்பித்துக்கொள்கிறோம்.
சீனாவைவிட நம் நாட்டு மக்கள் தொகை குறைவுதான். அந்த நாட்டை இப்படி குப்பைத் தொட்டி போலவா வைத்திருக்கிறார்கள்? எல்லாவற்றையும் சட்டம்போட்டுத்தான் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் நினைக்காமல், ‘நமக்கும் பொறுப்பு இருக்கிறது' என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், அயல்நாடுகள் எல்லா வகையிலும் முன்னேறிக்கொண்டு வருகின்றன. அவர்களை ஆள்பவர்களும் தலைவர் களாக இருப்பவர்களும் மக்களுடன் நெருக்கமாக பழகுகின்றனர். சட்டத்தை மதிக்கின்றனர். அதனால் மக்களும் சட்டத்தை மதித்து வாழப் பழகிவிட்டனர்.
ஆஸ்திரேலியாவில் சாலை நிறுத்தத்தில் விதிமீறப்பட்ட பிரதமர் ஒருவர் அந்த ஒரே காரணத்துக்காக பத வியை இழந்ததை எல்லோரும் அறிந் திருக்கலாம். இங்கு ஒரு கவுன்சிலரை இப்படி செய்துவிட வாய்ப்பிருக்கிறதா? ஆனால், எல்லா நாடுகளிலும் கையாள் வது ஒரே சட்டம்தான்!
எல்லா குற்றங்களில் இருந்தும், எல்லா தண்டனைகளில் இருந்தும் தப்பிக்கும் வழிவகைகளை அதிகாரம், பண பலம், செல்வாக்கு படைத்தவர்கள் மீறுவது போல் மக்களும் அவற்றைக் கற்று கையாளப் பழகிவிட்டார்கள்.
சாலைகளில் பயணிக்கிறபோது பய ணிப்பவர்கள் விபத்தில் இருந்து தப்பிக்க எத்தனையோ விதிகள் இருக்கின்றன. ஒரே ஒரு விதிகளைக்கூட முறையாக நாம் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை. வாக னத்தில் உள்ளவர்கள் அனைவருக்குமே தான் விபத்து நேரிட்டால் பாதிப்பு ஏற் படும். எனவே, அனைவருமே நான்கு சக்கர வாகனத்தின் இடுப்புப் பட்டை யைக் கட்டாயம் அணிய வேண்டும். இந்தியாவில் ஒரே ஒரு வாகனத்தில்கூட பயணிக்கும் அனைவரும் இதனை பின்பற்றுவதில்லை. வாகன ஓட்டி மட்டும் சில வேளைதான் விரும்பியோ, காவல்துறைக்கு பயந்தோ அணிந்து வாழப் பழகிவிட்டனர்.
தற்போது நடுத்தட்டு மக்களின் பெரும் சிக்கலாக உருவாகியிருப்பது இருசக்கர வாகனப் பயணத்தில் கட்டாயம் ஒவ் வொருவரும் தலைக்கவசம் அணிவது. இப்படிப்பட்ட உத்தரவுகள் இதற்கு முன் பலமுறை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெருக்கடிகள் தரப்படும் அந்தந்த காலங்களில் மட்டும் காவல்துறையின ருக்கு பயந்து அணிந்துவிட்டு, பின் அந்த தலைக்கவசத்தை வீசி விடுகிறோம். நெருக்கடி தராத காலங்களில் தலைக் கவசம் அணிந்து பயணிப்பவர்கள் நூற் றில் ஐந்து பேர்கூடத் தேராது. பயணத் துக்கு வசதியில்லாமல் இடைஞ்சல் தருவதாலும், காவல்துறை ஒருவேளை கேட்டால் சரிகட்டிக்கொள்ளலாம் என் பதாலும், போகிற உயிர் எப்படியும் போய்த்தான் தீரும் என விதியின்மேல் நம்பிக்கைக் கொண்டு, எத்தனைமுறை சட்டம் போட்டு உத்தரவு பிறப்பித்தாலும் மீதமுள்ளவர்கள் தலைக்கவசத்தைப் பின்பற்றாமல் விட்டுவிட்டார்கள்.
இப்போதுகூட இங்கே நடந்திருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு பயந்து காவல் துறையும், காவல்துறைக்கு பயந்து மக் களும் தலைக்கவசம் அணிய முன் வந் திருக்கிறார்கள். இப்படி ஒரே நாளில் திரும்பியப் பக்கமெல்லாம் தலைக்கவ சங்களைக் காண்பது எல்லோருமே உயிருக்குப் பயந்து அல்ல.
உலகம் முழுக்க இந்த சட்டம் நடை முறையில் இருக்கிறது. மக்கள் பின்பற்று கிறார்கள். ஆனால், நாம் மட்டும் இன்னும் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துகொண்டே வருகிறோம்.
நீதிமன்றம் காலக்கெடு கொடுத்தது. அது அனைவருக்கும் தெரியும். இருந்தும் கடைசி இரண்டு நாட்களில்தான் எல்லோ ருமே போக்குவரத்து தடைபடும் அளவுக்கு எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு, அந்த விற்பனைக் கடைகளில் குவிந்தோம்.
இப்படிப்பட்ட நேரங்களில் மனசாட்சி இன்றி, யாருக்கும் பயப்படாமல் இயங்கி பணம் பார்த்தவர்கள் மூன்று மடங்கு விலை வைத்து வாரிக் குவித்தார்கள். மக்களின் மனக்குமுறல் வெளிப்பட்டப் பிறகு அவர்கள் இனி அவ்வாறு செயல் படக் கூடாது என அறிவித்து, அதிகாரி கள் திறம்பட சோதனை செய்து குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, கடை ஒன்றுக்கு 2,500 ரூபாய் பணம் கட்டச்சொல்லி இருக்கிறார்கள்.
இந்த அதிகாரிகளுக்கு இவ்வாறெல் லாம் நடக்கும் என்பது முன்கூட்டியே தெரியாதா? ஒரு வாரமாக எல்லாவற்றை யும் வேடிக்கை பார்த்தபடியே இருந்து விட்டு, மக்களின் பணம் முழுக்க கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், இப்போது அறிக்கைத் தருகிறார்கள்.
தலைக்கவசத்தின் தரம், அதனை அணிபவர்களுக்கு வசதியாக இருக் கிறதா? அணிந்து பயணிக்கும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதெல்லாம் மக்களுக்கு அறிவுறுத் தப்பட்டிருக்க வேண்டும். தரமான வற்றைத் தவிர்த்து வேறு தலைகவசங் களை விற்பனைக்கு வைத்திருக்கக் கூடாது என்கிற சோதனைகளை முன் கூட்டியே மேற்கொண்டு, தரமற்றவற்றை அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.
இவை எதையுமே செய்யாமல், மீறு பவர்களைப் பிடிக்கிற வேலை மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.
எப்போதும்போல் செல்வாக்கு மிக்கவர்கள், அதிகார அமைப்பில் உள்ளவர்கள், விளம்பரமடைந்தவர்கள் என யாருடைய பெயரைச் சொன்னா லும் நடவடிக்கை இல்லை என்கிற நிலையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
தலைக்கவசத்தை அணிந்துகொண் டால் நினைத்தப்படி திரும்பிப் பார்க்க முடியாது, பின்னால் வரும் வாகனங் களின் சத்தம் கேட்பது குறைந்து விடும், இதனாலேயே நிறைய விபத்துக் கள் ஏற்படும், இரண்டு பக்கங்களிலும் கண்ணாடி பொருத்தப்படாத வாக னத்தை எவ்வளவு தரமான கவசம் அணிந்து ஓட்டினாலும் விபத்து நடக்க அதிக வாய்ப்பு உண்டு... இதுபோல் எவ்வளவோ முன்னேற்பாடுகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்ட பின்னர் தலைக்கவசம் அணிந்து பய ணிப்பதுதான் உயிரைக் காக்கும் வழி. இதெல்லாம் இல்லாமல் வெறும் தலைக் கவசம் அணிந்தால் மட்டும் போதும் என கண்காணிப்பதால், மீண்டும் திரும் பப் பெறமுடியாத உயிர்களைக் காப்பாற்றிவிட முடியாது.
இருக்கிற வழக்குகளைத் தீர்க்கவே இங்கே நேரமில்லை. உயர்நீதி மன்றத்தி லேயே பெரிய பெரிய வழக்குகளெல் லாம் பாதிக்கும் மேற்பட்ட நீதிபதிகளின் இடம் நிரப்பப்படாததால் காத்துக்கிடக் கின்றன. நம் ஊர் காவல் நிலையங்களில் இருக்கிற வசதியில், கையகப்படுத்துகிற இத்தனை ஆயிரம் வாகனங்களையும் எங்கே கொண்டு போய் நிறுத்தி வைக்க முடியும்?
‘ஒருவேளை பிடித்தாலும் எப் போதும் போல் காவலர்களை சரிகட்டிவிடலாம்; இருக்கிற பிரச்சினை யில் இதெல்லாம் ஒரு பிரச்சினையா’ என்கிற அலட்சிய குரல்களும் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. இம்முறை தலை தப்புமா தெரியவில்லை!

- சொல்லத் தோணுது...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com