Tuesday 20 September 2016




இன்று வரலாற்றில் முக்கியமான நாள்.சொந்த நலனுக்காக தமிழகத்தை இவ்வளவு காலம் நசுக்கி கண்டுகொள்ளாமலிருந்த காங்கிரஸ்,பா.ஜ.கட்சிகளின் மூக்கை உடைத்து உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நமக்கு நீதி கிடைத்திருக்கிறது. நான்கு வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டிய கட்டயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
அதிர்ச்சியில் உறைந்துள்ள கர்நாடகம் பழையபடி தன் அடாவடித்தனங்களைக்காட்டும். அதைக்காரணம் காட்டி மத்திய அரசு நிறைவேறாமல் எப்பொழுதும் போல் நழுவப்பார்க்கும்.
தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் டெல்லியிலேயே முகாமிட்டு காரியத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படி நடக்குமாத்தெரியவில்லை. காரியத்தை நிறைவேற்ற தமிழக மக்களின் முன் எப்போழுதுமில்லாத போராட்டம் நடத்த வேண்டியதன் தேவையும் உருவாகலாம்!
தேய்ந்து கொண்டிருக்கும் தமிழினம் இப்பொழுதாவது விழிக்கட்டும். நமதுரிமை நமக்கு கிடைக்கட்டும்.

Monday 19 September 2016




இனி ஒவ்வொன்றாய் !!

சென்னையை வெள்ளம் மூழ்கடித்து மக்கள் பரிதவித்து, கதறி அரசாங்கத்தை கேள்விகேட்டபோது, "பீப் பாடல்" வெளிவந்து அனைவரும் "பீப் பாடலை" பிடித்துக்கொண்டார்கள்.அதன்பின் வெள்ளப்பிரச்சினையை மக்கள் மறந்தே போனார்கள்!
அதேபோல் காவிரிப்பிரச்சினை கழுத்தைப்பிடிக்கிற நிலை வந்ததும் "ராம்குமார்" செய்தி வெளிவந்திருக்கிறது. இனி காவிரி மறந்துபோகும்.

Friday 16 September 2016




அப்பா என நான் அன்போடு அழைக்கின்ற தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 94 வயது இன்று. நான் அவருடன் உரையாடிய நேர்காணலின் இணைப்பு இது. அவரது பிறந்த நாளையொட்டி இன்று தந்தி தொலைகாட்சி இந்த 3௦ நிமிடப்படத்தை ஒளிபரப்பி அவருக்குசிறப்பு சேர்த்தது.https://youtu.be/mp-6Iiu5cZI

Thursday 15 September 2016


   உலக நாடுகளிலெல்லாம் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்கெல்லாம் அனுமதி அளித்து, எங்கெல்லாம் ஆறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கொண்டுவந்து தங்களின் சொந்த நன்மைக்காக அவைகளை நிறுவியவர்கள்தான் நம்மை ஆண்டவர்களும், ஆள்பவர்களும்!
  நீர் ஆதாரங்களை பாதுகாக்காமல் அவரவர்களுக்கென தனித்தனியாக கொள்ளைக்கூட்டங்களை வைத்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் இவர்கள் மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் எனத் தொடர்ந்து  நம்பிக்கொண்டிருக்கிறோம்!
  நீர் நிலைகளை,இந்த மண்ணை,காற்றை மாசுப்படுத்தி மக்களையும்,உயிரினங்களையும் அழித்துக்கொண்டிருக்கும் ஆலைகளையும்,தொழிற்சாலைகளையும் நிரந்தரமாக மூடி வெளியேற்றுவதை விட்டுவிட்டு வெறும் துடைப்பத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை தூய்மை நாடாக்க முயலும் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழர்களின் உரிமைப்பற்றியும்,உணர்வுப்பற்றியும்,வாழ்வுப்பற்றியும் என்ன கவலை இருக்கிறது?
  என்றைக்கும் மாறாத சிக்கலாக மாறிவிட்ட காவிரிக்காக இதுவரை எத்தனை எத்தனைத் தீர்ப்புகள்! எத்தனை எத்தனைப் போராட்டங்கள்!
  இவையெல்லாம் தெரிந்தும் நாளை நடக்கவிருக்கும் போராட்டம் ஒவ்வொரு தமிழனின் உணர்வையும்,நமக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும் இந்த உலகுக்குச்சொல்லும் போராட்டம்.
  நம்மைவைத்து அரசியல் தொழிலை நடத்துபவர்கள் இதுவரை அனைவரும் ஒன்றிணைத்து எந்தப்போராட்டத்தையும் நடத்தாதவர்கள். ஒரேயொரு முறைகூட ஓரிடத்தில் அமர்ந்து இந்த மக்களின் நலனுக்காக குரல்கொடுக்காதவர்கள். இவர்களுக்கும்,கர்நாடக மாநில அரசின் செயல்பாடுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

  மூன்று வேளையும் தவறாமல், பசியில்லாமல் போனாலும் கடிகாரம் பார்த்து சாப்பிடுகிற நாம் இந்தப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். நானும் ஒரு தமிழனாக,ஒரு உழவனாக நாளை போராட்டத்தில் பங்கேற்று என் கடமையை ஆற்றுகிறேன்.


 

Monday 12 September 2016






இன்றைய தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் இந்தக்காட்சி 2௦௦3 ஆம் ஆண்டு எனது இயக்கத்தில் வெளியான “தென்றல்” திரைப்படத்தில் இடம்பெற்றது. 27 ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பதாக இருக்கின்ற இக்காட்சி சொல்லும் அரசியலில் இன்னும்கூட சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள்தான். நாம் இந்தியர்களாக இருந்து இழந்தவைகளும்,இழக்கப்போவதும் இன்னும் நிறைய..!.

Saturday 10 September 2016

இந்த பாரதி இன்றிருந்தால்!!



       2000 ஆண்டில் பாபநாசம் காட்டில் வெறும் 11 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட பாடல் இது. எனது ஒளிப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்தப்படம் பாரதி.