Sunday 3 May 2015

சொல்லத் தோணுது 20 - மக்களாட்சியும் - புழுத்த அரிசியும்

சென்னையில் என் தெருவில்தான் அப்பகுதிக்கான உணவு வழங்கு துறையின் கிளை உள்ளது. தெருவின் இரண்டு பக்கங்களிலும் அதன் வாசல் பகுதி இருப்பதால் மக்கள் கூட்டம் தெருவை அடைத்துகொள்ளும் போதெல்லாம் வரிசையில் பரபரப்புட னும், கவலையுடனும் நிற்கும் அவர்களின் முகத்தை கவனிக்காமல் செல்லத் தவறு வதில்லை. ஒவ்வொரு மாதமும் வழங் கும் உணவுப் பொருட்கள் பற்றிய பேச் சுக்களையும், அவர்களின் குமுறல்களை யும் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
பெரும்பாலான நாட்களில் ஒருவர் கூட அங்கு காத்திருக்காததும், சில நாள் வரிசையில் கூட்டம் காத்துக் கிடப்பதை யும் பார்த்துக்கொண்டேதான் இருக் கிறேன்.
அரிசியோ, மண்ணெண்ணெயோ. சர்க்கரையோ எதுவாக இருந்தாலும் ஒருநாள் இரண்டு நாள் மட்டுமே வழங் கப்படுவதும், மறுநாள் கேட்டால் தீர்ந்து விட்டதாகச் சொல்வதும் காலங்கால மாக நடந்துகொண்டே இருக்கிறது. பொருள் வழங்குவதாக அவர்கள் குறிப்பிடும் நாட்களில் பொருட்களை வாங்காவிட்டால் அந்த மாதத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதை மறந்துவிட வேண்டியதுதான். இதனால் தான் அடித்துப் பிடித்து வரிசையில் இடம்பிடித்து, வெய்யிலில் கால் கடுக்க நிற்கிறார்கள். அப்போதெல்லாம் அந்த இடத்தை கடக்கும்போது கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வரிசையில் நிற்கும் சிறைவாசிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள்.
இவ்வாறெல்லாம் வரிசையில் காத் துக்கிடந்து வாங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மக்கள் அவர்களுக்குள் பேசிக் குமுறுவதுடன் முடிந்துவிடுகிறது. பல நேரங்களில் நாற் றம் பிடித்த புழுத்த அரிசியை ஏன் தருகிறீர்கள் என அந்தத் துறையில் பணியாற்றும் தெரிந்தவர்களிடம் கேட் டேன். அரசாங்கம் தருவதைத்தானே மக்களுக்குத் தர முடியும். இடையில் நாங்கள் வெறும் ஊழியர்தான் என கழன்று விடுகிறார்கள்.
அரசு நடைமுறைப்படுத்தாத, இவர் களாக வகுத்துக் கொண்ட இப்படிப்பட்ட செயல்பாடுகளால் மக்கள் துன்பப் படுவது பற்றி யாருக்கும் கவலை யில்லை. எதிர்த்து கேள்வி எழுப்பி னால் தங்களுக்கு ஏற்கெனவே கிடைப் பதும் கிடைக்காமல் போய்விடுமே என்ப தால் யாருமே இவர்களைக் கண்டு கொள்வதில்லை. இவர்களாக உருவாக் கிக் கொண்ட நடைமுறையினால், உணவு வழங்கப்படாத அட்டைகளுக்கான உணவுப் பொருட்கள் ஏற்கெனவே இருப்பில் உள்ள கணக்குடன் சேர் வதே இல்லை. அப்படியென்றால் மாயமாய்ப் போகும் மக்களுக்குச் சேர வேண்டிய அந்த உணவுப் பொருட் கள் எங்கே போகின்றன... என நான் நண்பர்களிடம் கேட்டதற்கு, போகின்ற இடம் உனக்குத்தான் தெரியவில்லை; அது மக்களுக்கும் தெரியும், அரசாங் கத்துக்கும் தெரியும் என நமுட்டு சிரிப்புடன் கூறுகின்றார்கள்
ஆயிரக்கணக்கான கோடிகளை விழுங்கிக் கொண்டிருக்கும் நாற்ற மெடுத்த, புழுத்த அரிசிகளை தடுத்து நிறுத்த ஒருவருக்குமே அக்கறை யில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அரசு மாதாமாதம் வழங்கு கிற விலையற்ற 20 கிலோ அரி சியை வாங்கியவர்களுக்கும், அதனை சமைத்து சாப்பிட்டுப் பார்த்தவர்களுக் கும் உண்மை நிலை தெரியும். ஒரு அரசு, மக்களுக்குப் பயன்பட வேண்டுமென ஒருதிட்டத்தை உருவாக்கி தரமற்றப் பொருளைத் தரவேண்டுமென்கின்ற கட்டாயமோ, தேவையோ இல்லைதான். ஆனால் அதுதானே நடைமுறையில் நிகழ்கிறது.
அரசுப் பதவிகளில் இருப்பவர்கள், பொறுப்பில் இருப்பவர்கள், அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர் களோ என யாராக இருந்தாலும் ஒரே ஒரு கைப்பிடி இந்த உணவை உண்டு பார்த்திருக்கிறார்களா?
ஒருவேளை உண்டு பார்த்திருந்தால் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது புரிந்திருக்கும். உயர்ந்த பொருட்களெல்லாம் உள்ளவர்களுக்கு, வீணாய் போனதெல்லாம் இல்லாதவர் களுக்கு என இருந்து விடப்போகி றார்களா?
இந்தப் பொறுப்பில் இருப்பவர்கள், இதற்குக் காரணமானவர்கள் கொஞ்சம் இங்கே என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஏழை மக்களின் வீட்டுக்குச் சென்று பாருங்கள். தொடக்கத்தில் இந்த நாற்றமெடுத்த புழுத்த அரிசியை பண மில்லாமல் இலவசமாகத் தானே தரு கிறார்கள் என்பதால் ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் மட்டும் அதை வாங்கி வீட்டிலுள்ள ஆட்டுக்கும், மாட்டுக்கும், நாய்க்கும், பூனைக்கும், வேலையாட் களுக்கும் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது அப்படிப்பட்ட அரிசியை வாங்கும் அனைவருமே அதனை தாங்கள் உண்ணாமல் ஆடு, மாடு, கோழி, நாய்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
ஒரு கிலோ அரிசி இன்றைய விலை யில் மிகக் குறைவாக மதிப்பிட்டாலும் கிலோ 30 ரூபாய் என்றால் 600 ரூபாய் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவச மாக மாதந்தோறும் வழங்கப்படுகின்றது. இந்த கோடிக்கணக்கான நிதி முழுவதையும் நடுவண் அரசும், மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன என்றா லும் அவை மக்களிடமிருந்து பெறப் பட்ட வரிப் பணம்தானே! இப்படிப்பட்ட தரமற்றப் பொருளை வழங்க ஒரு அமைச் சகம், ஒரு துறை, லட்சக்கணக்கான ஊழியர்கள் எனக் கணக்கிட்டால்... ஒவ்வொரு மாதத்துக்கும் எத்தனை ஆயிரம் கோடியாகும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.
நுகர்பொருள் வாணிபக் கழகம்தான் அரிசியை விளைவிக்கும் உழவனிடம் இருந்து நேரடியாக நெல்லை கொள் முதல் செய்கிறது. பின் அதன் பராமரிப் பில்தான் ஆலைகளுக்குச் சென்று அரிசி யாக மாற்றப்பட்டு நுகர்வோர்களாகிய மக்களுக்கு தரப்படுகிறது.
இதில் உழவர்களுக்கு முறையான விலையில் அவர்களுக்கான பணமும் போய்ச் சேர்கிறது. நெல்லை கொள்முதல் செய்து பாதுகாத்து அரிசியாக்கி மக்க ளிடம் வழங்கும் இந்த இடைப்பட்ட காலத் தில்தான் நன்றாக இருந்த அரிசி விலங்கு கள், கால்நடைகள் மட்டுமே உண்ணும் உணவாக மாறிவிடுகிறது. ஒருமுறை இந் தத் தவறு நடந்திருந்தால் அதைத் தவறு எனலாம். இதையே வழக்கமாகிக் கொண்டதை என்னவென்று அழைப்பது?
நல்ல மனதோடு திட்டங்களை தீட்டும் அரசு அது மக்களை முழுமையாகச் சென்றடைகிறதா என்பதில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் கோடிக் கணக்கான பொருளாதாரம் இழப்பு, உணவு இழப்பு, உழவர்களின் உழைப்பு இழப்பு. ஏற்கெனவே கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கும் உழவன் தன் கையி லிருந்து போனால் போதும் என அறு வடைக் களத்தில் இருந்தபடியே அதனை உலர்த்த நேரமில்லாமலும், இடமில்லா மலும், கொடுத்துவிடுகிறான். எடை போட்டுவாங்குபவர்கள் அதனை உலர்த் திப் பாதுகாத்து வைக்க இடமில்லாமல் மூட்டையாக்கித் தேக்கி விடுகின்றார்கள். தேக்கப்பட்ட மூட்டைகள் ஈரப் பதத்துடன் அரவை ஆலைகளுக்குச் செல்வதால் பக்குவத்தில் இருக்கும் நெல்லுக்கும், ஈரமான நெல்லுக்கும் அதே நேரம் தரப் பட்டு அரிசியை மீண்டும் மூட்டையாக்கி கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட அரிசிதான் மக்களுக்கு வழங்கப்பட்டு பின் கால்நடைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக மாறு கின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் தானியங் களை அறுவடை செய்யவும், உலர்த்த வும் ஒதுக்கப்பட்டிருந்த களங்கள் எல் லாம் அந்தந்த ஊர்களில் திறமையுள்ள வர்களால் கையகப்படுத்தப்பட்டு விட்டன. நெல் அறுவடை செய்யும் பகுதி களில் உலர் தானியக் களங்களை உரு வாக்கிக் கொடுப்பதும், ஏற்கெனவே தஞ்சாவூரில் இருப்பதைப் போல் ஒவ் வொரு கொள்முதல் நிலையங்களிலும் தானியங்கி உலர்தானியக் கருவிகளை அமைத்துக் கொடுப்பதும், நெல்மூட்டை களை சேமித்து வைக்க இடமில்லாமல் வாடகைக்கு இடம்பிடித்து தார்பாயிட்டு வெட்டவெளிகளில் சேமித்து வைப்பதை தவிர்ப்பதும் அரசு உடனடியாக செய்ய வேண்டிய இன்றியமையாத செய லாகும்.
உழவர்கள் விளைவித்த உணவையே அவர்களே பயன்படுத்த முடியாத கொடு மைக்கு யார் பதில் சொல்லப் போ கிறார்கள்?
- சொல்லத் தோணுது
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

No comments:

Post a Comment