Saturday 20 June 2015

சொல்லத் தோணுது 38: மீண்டும் ‘அ’வில் இருந்தா? - தங்கர் பச்சான்


நானும் ஒவ்வொரு வாரமும் எழுதுகிறேன். நீங்களும் படிக்கிறீர்கள். இதன்மூலம் எங்கேயாவது ஒரு எள்ளளவு மாற்றமாவது நிகழ்ந்திருக்கிறதா? வேலையில்லாமல் ஒருத்தன் எழுதுகிறான், வெட்டிக் கூட்டம் அதைப் படிக்கிறது; பாவம் இவர்கள் என சிலர் நினைக்கலாம். எல்லாவற்றையும் கேட்டு மறந்துவிடும் கூட்டம், கேட்டும் எந்த மாற்றத்தையும் செய்யத் துணியாத அதிகாரவர்க்கம்; இதுதான் தற்கால இந்தியா!
‘‘நீ தொடர்ந்து எழுத வேண்டுமா? மக்கள் வீதியில் இறங்கிப் போராடாத வரை இதெல்லாம் வீண் வேலை’’ என எனது நண்பர்கள் என்னைத் திட்டி, என் பேனாவைப் பிடுங்குகிறார்கள். உணர்ச்சியோடு வாழ்வதால் தொடர்ந்து நான் எழுதுகிறேன்.
நேற்றுவரை நாம் சாப்பிட்டு மகிழ்ந்த உணவுகள் இன்று வேதிப் பொருட் கள் கலந்தவை எனக் கூறினால் எப்படி இருக்கும்? நூடுல்ஸ் எனும் சீனாக்காரன் உணவு, இன்று நம் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது. நாஞ்சில் நாடன் எழுதியது மாதிரி நூடுல்ஸ் வாங்கி, அதில் சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பிடும் கிராமத்து மனிதர்களை நானும் கண்டிருக்கிறேன்.
இங்கு ஒரு சிறிய பொருள்கூட அரசு அனுமதியின்றி விற்பது சட்டப்படி குற்றம். முறைகேடுகளைக் கண்டுபிடித்தால் கடும்தண்டனை உண்டு. லட்சக்கணக் கான பொருட்கள் விற்பனையில் உள்ள இவ்வளவு பெரிய நாட்டில், ஒரேயொரு குற்றவாளியாவது கடும்தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாரா?
அரசாங்கம்தான் கலப்படத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கிறது. சட்டமும் அதன் கையில்தான் இருக் கிறது. ஏன் எதுவும் நடக்கவில்லை? நடக்கவில்லை எனச் சொன்னால் நாம் விவரம் இல்லாதவர்களாகிவிடுவோம். நடக்கிறது. அதாவது, அடிக்கிற மாதிரி அடிப்பார்கள்; அழுகிற மாதிரி அவர்களும் அழுவார்கள். தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மக்களிடத்தில் உறுதிபடுத்த, இப்படி வீதியோரக் கடைகளில் சோதனை நடத்தி, செய்தி அறிவிப்பார்கள். அதனைப் பார்த்து நாம் நடவடிக்கைகள் நடைபெறுவதாக நம்ப வேண்டும்.
தரமற்றப் பொருட்களைத் தடை செய்யும் உணவு பாதுகாப்பு அதிகாரி கள் கையூட்டு வாங்கிக் கொண்டு, மக்களின் எதிரிகளாக மாறி நெடுநாட் களாகிவிட்டன. இவர்களுக்குத் தெரி யாமல் எந்தக் கலப்படப் பொருளும் இங்கே விற்க முடியாது. இன்று அச்சமின்றி எந்தப் பொருளையும் வாங்க பயமாக இருக்கிறது.
இந்தப் பொருட்களை உற்பத்தி செய்ய மூலக் காரணியாக இருக்கும் அறிவியலாளன், அதன் முதலாளி, அதனை விற்பவன், வேண்டியதைப் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் ஒதுங்கிக்கொள்ளும் அந்தத் துறை அதிகாரிகள், அதனோடு தொடர்புடைய அமைச்சகம் எல்லாமும் ஒவ்வொரு நொடியும் நம்மை கொன்றுகொண்டே இருக்கிறது.
எனது நண்பனின் அண்ணன் சிறு நகரத்தில் உள்ள ஒரு கடைக்கு வீட்டுப் பொருட்கள் வாங்கப் போயிருக்கிறார். அங்கே எல்லா பொருளுமே காலாவதி யான பொருளாக இருந்திருக்கிறது. ஒருமணி நேரத்தில் அந்தக் கடைக்கு பூட்டுப் போடச் செய்துவிட்டார். உடனே அவருக்கு பல நிலைகளில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமும், மன உளைச்சலும் யாருக்குத் தெரியும்? அவரால் அந்தக் கடையை 6 மணி நேரம்தான் மூடி வைக்க முடிந்த‌து. இந்தப் பிரச்சினையில் இறுதியாக தண்டிக் கப்பட்டவர், பொருட்களை விற்பனை செய்த அந்தக் கடைக்காரர் இல்லை. தடை செய்த நண்பரின் அண்ணன்தான்!
ஒரே நாளில் மதுராந்தகத்தில் பெப்சி குளிர்பானத் தொழிற்சாலைக்கு பூட்டு போட்டு நான்கு மாநிலங்களில் விற்பனையை நிறுத்தி, தடை செய்ய உத்தரவிட்ட அதிகாரி சகாயம் இரவோடு இரவாக பணிமாற்றம் செய்து கடைநிலைப் பணிக்கு தள்ளப்பட்டது போல் நண்பரின் அண்ணனும் தள்ளப் பட்டார்.
சிக்கல் வெளிவந்த உடனே தமிழக அரசு 5 நிறுவனங்களின் நூடுல்ஸ்களை தற்காலிகமாக தடை செய்துள்ள‌து. அப்படியென்றால் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிற மற்ற எல்லாப் பொருட்களும் பாதுகாப்பானவை என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? இத்தனை நாட்களுக்குள் விற்பனைக்கு உள்ளான அனைத்துப் பொருட்களின் தரமும் உறுதி செய்யப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிக்குமா?
தரமற்ற உணவுப் பொருட்களினால் கல்லீரல், இரைப்பை, மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல், நுரையீரல், இதயம், நரம்பு மண்டலம் போன்றவைகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் மூளைச் செயலிழப்புகூட வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மஞ்சள் மற்றும் துவரம் பருப்பில் மஞ்சள் நிறம் வருவதற்காக மெட்டா னில் என்ற‌ வேதிப் பொருள் சேர்க்கப் படுகிறதாம். சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள், கொத்தமல்லித் தூளில் குதிரைச் சாணம், கருப்பு வெல்லத்தை வெள்ளை யாக மாற்ற ஹைட்ரோ குளோரிக் அமிலம், பாக்குத் தூளில் மரத் தூள், பாலில் சோப்புத் தூள் மற்றும் காஸ்ட்டிக் சோடா, ஆப்பிள் பழத்தின் மேல் மெழுகு என பட்டியல் முடியவே முடியாது. தரமற்ற கலப்படப் பொருட்களை ஆய்வு செய்தால் ஒரே ஒரு கடையைக்கூட திறந்து வைத்திருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் நம் வயிற்றுக்குள் போய்க் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான கறிக்கோழிகளை உருவாக்கப் பயன்படுத்தும் நஞ்சுப் பொருட்களைப் பற்றி சிந்தித்து, அதற்குரிய‌ கட்டுப்பாட்டை விதிக்க, யாருக்கு இங்கே நேரமிருக்கிறது. ஒரு மாம்பழத்தைக்கூட அச்சமின்றி உண்ணும் பாதுகாப்பை அளிக்க அரசாங்கத்தால் முடியவில்லை.
பான் மசாலாவுக்கு இங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை விற்காத கடைகள் உண்டா? இதெல்லாம் இந்த அதிகாரிகளுக்குத் தெரியாதா? ஊழல் பணத்தில், லஞ்சப் பணத்தில் உயிர் களைக் கொல்லும் இந்த அயோக்கி யர்கள்தான் மக்களைக் காப்பாற்றுவார் கள் என்று எத்தனை நாளைக்குத்தான் நம்பிக் கொண்டிருக்கப் போகிறோம்? வேண்டியவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டு, யாரும் எதையும் செய்து கொள்ளலாம். இதற்குத்தான் கால்கடுக்க வரிசையில் நின்று வாக்களிக்கிறோம். அதன் பெயர்தான் நாம் மார்தட்டிக் கொள்ளும் ஜனநாயகம்!
குளிர்பான நிறுவனம்தான் தண் ணீரை உறிஞ்சி விவசாயத்தைக் கெடுக்கிறது. அதற்காகத்தான் அந்தக் கதை நாயகனும், விவசாயிகளும் போராடுகிறார்கள் என்று அந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டிக் கொண்டே, அதே படத்தின் இடைவேளை யில் கொஞ்சமும் வெட்கமில்லாமல் அதே குளிர்பானத்தை வாங்கி சுவைக்கிறோம். அவ்வாறு நடிப்பவர்களுக்கு கோடிக் கணக்கில் பணம். அந்தக் குளிர்பான விளம்பரத்தில் நடிப்பவருக்கு பணம். இரண்டையும் பார்த்துக் கொண்டிருக் கும் சமூகத்துக்குக் கிடைத்த புதிய‌ செய்திதான் - நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்களின் மேல் வழக்கு என்பது. ஒருவேளை பரிசோதனை எல்லா பொருட்களின் மீதும் நிகழ்த்தப்பட்டால் யார் யார் மீதெல்லாம் வழக்குகள் தொடர வேண்டியிருக்கும்? அந்தப் பட்டியலில் மக்களைத் தவிர அரசாங்கம், அதிகாரிகள், விற்பனையாளர்கள் என எல்லோருமே இருப்பார்கள்.
இதற்கு ஒரே தீர்வு, மீண்டும் ஒரு விடுதலைப் போரை சிப்பாய்க் கலகத்தில் இருந்து தொடங்குவதுதான்!

- சொல்லத் தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

No comments:

Post a Comment