Tuesday 29 December 2015




படச்சுருள் - இதழில் எனது விரிவான நேர்காணல் 

        சண்டையிட்டு விருதுகள் வாங்குவது முட்டாள்தனம் – தங்கர் பச்சான்























Saturday 12 December 2015

கடலூர் மாவட்டத்தைக் காப்பாற்றுங்கள்
தங்கர் பச்சான்அறிக்கை
மழை வராதா என ஏங்கியதுபோய், மழை வந்து விடுமோ என பயந்து கொண்டிருக்கிறோம். எங்கு திரும்பினாலும் தண்ணீராய்க் காட்சியளிக்கும் சென்னை இன்னும் நான்கு மாதங்களில் தண்ணீர் குடங்களோடு தண்ணீர் லாரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும். சென்னையைச் சுற்றிலும், சென்னைக்குள்ளும் ஏராளமான ஏரிகள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலத்திலிருந்தும், வீராணம் ஏரியிலிருந்தும், ராட்சச கிணறு உருவாக்கி நிலத்தடி நீரை உறிஞ்சியும்தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. விவசாயத்துக்காகப் பயன்படுத்த வேண்டிய தண்ணீரை இவ்வாறு குடிநீருக்கு பயன்படுத்துவது குறித்து யாரும் கவலை கெண்டதே இல்லை.
எல்லா தொழில் நுட்பங்களையும் கையாளத் தெரிந்த நமக்கு, விலை மதிப்பற்ற மழை நீரை சேமித்து வைக்கத் தெரியவில்லை. அதேபோல் தேங்கித் கிடக்கும் தண்ணீரை வெளியே அனுப்பவும் தெரியவில்லை. நீர் மேலாண்மைக்கென எத்தனையோ துறைகள் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் உருவாக்கப்படும் பொறியாளர்கள் இருந்தும் நமக்கு இந்த இரண்டையுமே செய்யத் தெரியவில்லை.
ஏரி, குளம், குட்டை, கண்மாய் என நீர் நிலைகள் இருந்த இடங்களைத் தேடி அரசாங்கமே பொது மருத்துவமனை, பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், ஆட்சி செய்வதற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து கட்டிடங்களையும் எழுப்பிக் கொண்டே இருந்தது. அரசாங்கத்திற்கு இடங்களைத் தேர்வு செய்து திட்டங்கள் தீட்டிக் கொடுத்ததெல்லாம் மக்கள் பணத்தில் கல்வி கற்று மக்கள் பணத்தில் மாத ஊதியம் முதற்கொண்டு ஓய்வூதியம் வரைப் பெறுகின்ற நம் அதிகாரிகளும், பொறியாளர்களும்தான். காலங்காலமாக நம் தலைமுறைகளை வாழவைத்து வந்த ஏரியையும், குளம் குட்டைகளையும் குப்பைகள் கொட்டும் இடமாகவே மாற்றிவிட்டோம். கர்ணம், மணியக்காரர், தலையாரி எனும் பதவியிலிருந்தவர்கள் வரை அவைகள் பராமரிக்கப்பட்டன. எப்பொழுது கிராம நிர்வாக அலுவலர் எனும் பதவியைக் கொண்டு வந்து எதைப் பற்றியும் அறியாத வெறும் ஏட்டுப் படிப்பாளர்களிடம் நிர்வாகம் முடங்கியதோ அப்பொழுதிலிருந்தே நீர்வழித் தடங்களும், நீர் நிலைககளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கையகப்படுத்தப்பட்டன.
மரபுவழி நிர்வாக முறைத் தொடர்ந்திருந்தால் இவைகள் களவாடப்பட்டு காணாமல் போயிருக்காது. ஏறக்குறைய ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரி மூன்றில் ஒரு பங்கைவிட குறைவாகச் சுருங்கியிருக்காது. சென்னை மாநகரத்துக்கே தண்ணீர் தரக்கூடடிய அளவிலான பெரிய ஏரி இன்று கண்மாய்போல் மாறியிருக்காது.
நம்மிடமுள்ள ஆறுகளையும், நீர் நிலைகளையும் பராமரித்து நீர் தேக்கி நிலத்தடி நீரைப் பெருக்கிக் கொள்ளும் நிர்வாகம் தெரியாமல், பிற மாநிலங்களிடம் கெஞ்சிக் கொண்டும், விவசாயத்திற்குப் பயன்படக்கூடிய வீராணம் ஏரி நீரையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி பெரிய பெரிய குழாய்களை விவசாய நிலங்களில் பதித்து 250 கிலோமீட்டரிலிருந்து சென்னைக்கு நீரைக் கொண்டு வந்திருக்க மாட்டோம்.
இயற்கை பாதுகாக்கப்படுவதையும், நீர் மேலாண்மையையும், உழவுத் தொழிலையும் கண்டு கொள்ளாத, பராமரிக்கத் தெரியாத அரசாங்கம் எங்கிருந்தாலும் குடிமக்களின் நிலை பெருந்துயரந்தான்.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே திருக்கண்டலத்தில் 33 கோடி ரூபாய் செலவில் எழுப்பப்பட்ட தடுப்பணை ஓராண்டுக்குள்ளேயே உடைந்திருக்கிறது. இப்படிப்பட்ட தரத்தில் அணைகள் கட்டப்படுவதற்குப் பதிலாக எதுவும் செய்யாமலேயே இருந்து விடலாமோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்னும் புதுப்பொலிவுடன் நிற்கின்ற கல்லணைக்கும் இதற்கும் உள்ள இடைவெளியை எல்லாவற்றிலும் உணர முடியும்.
ஒரே மாதிரியாக ஒன்று விடாமல் எல்லா அரசியல் கட்சிகளும் நீர் நிலைகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் தவறி விட்டோம் என கூப்பாடு போடுகிறார்கள். ஒரே ஒரு கட்சிகூட நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுதந்திரத்திற்குப் பின் இந்த நாள் வரைக் கணக்கெடுத்து கையகப்படுத்தப்பட்ட நீர்வழித்தடங்களையும், நீர் நிலை ஆதாரங்களையும் மீண்டும் மீட்டெடுத்து உருவாக்கித் தருவோம். அது இப்போது யாரிடமிருந்தாலும், எங்கள் கட்சிக்காரரிடமிருந்தாலும் பரவாயில்லை. அதற்கான சட்டம் உருவாக்கி நீதிமன்றத்தின் துணையுடன் செயல்படுத்துவோம் எனக் கூறவேயில்லை. அன்றாடங்காய்ச்சிகள் இவற்றையெல்லாம் கைப்பற்றவில்லை. அதிகாரத்தில் இருந்தவர்களும், அவர்களைச் சார்ந்து இயங்கியவர்களுமே கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இப்போது நம்மை மழையைப் பார்த்து அச்சம் கொள்ள வைக்கிறார்கள்.
‘‘அசோகர் என்னத்தைய்யா செஞ்சி கிழிச்சார்? சும்மா, காலங்காலமா, ‘ஏரிகளை, குளம் குட்டைகளை உருவாக்கினார், மரங்களை வளர்த்தார், சாலைகள் நிறுவினார்என இதையேத்தான் வரலாறு பாடத்துல சொல்லிக் குடுக்கறாங்க. அதெல்லாம் ஒரு படிப்பா? ராஜாவுக்கு இதான் வேலையாஎனவும் நாம் கேலி செய்து வரலாறு பாடத்தைப் புறக்கணித்தோம்.
இன்றைக்காவது எதற்காக அசோகர் மகாராஜா அவ்வாறு ஆட்சி செய்தார்? எதனால் அவரது ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.
நமக்கு நீர்வழித் தடங்களைப் பராமரிக்கிற அளவுக்கு நேரந்தான் கிடைக்கவில்லை. பெருமழை வெள்ளம் தொடர்ந்து ஒரு வார காலமாக கொட்டித் தீர்ப்பது தெரியும். செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு என்ன என்பதும் தெரியும். ஏரியில் வந்து சேருகிற நீருக்கேற்ப வெளியேற்றக் கூடவாத் தெரியாது. அதை கண்காணிப்பது யாருடைய வேலை? ஏற்கெனவே மழைநீரில் தத்தளித்துத் தவித்துக் கொண்டிருக்கிற மக்களிடத்தில் சொல்லாமல் கொள்ளாமல் முன்னறிவிப்பின்றி திடீரென நடு இரவில் ஏரியைத் திறந்து விடுவதென்பது யார் செய்த வேலை? நான்தான் இதற்கான ஆணையைப் பிறப்பித்தேன் என ஏற்றுக் கொள்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?
தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரிலேயே கால்கடுக்க நின்று கொண்டு நிவாரணம் தர யார் வருவார்கள் எனக் காத்திருக்கும் மக்களுக்கு இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமேது!
சென்னை மக்களுக்கு இந்த முறைதான் இதுபோன்றதொரு துயரம். கடலூர் மாவட்ட மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தைக் கடப்பதற்குள் அடுத்த ஆண்டு வந்துவிடும். சரியாக 28 நாட்களுக்கு முன்னால் தொடங்கிய மழை இன்னும் நின்றபாடில்லை. மேட்டுப்பகுதியான ஒருசில பஞ்சாயத்துக்கள் தவிர மற்ற முழு மாவட்டமும் நீரிலேயே மிதக்கிறது.
இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயப் பயிர்கள் முற்றிலும் மூழ்கி சேதமடைந்து விட்டது. இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நீரும் சுரங்க கரித்தூள் மண்ணும் நிலத்தில் படிந்து மேடாக்கி இனி புல் பூண்டு கூட முளைக்காத பூமியாக்கிவிட்டது. எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் இந்த விவசாயக் குடிகளும், அவர்களின் பிள்ளைகளும் எங்கே போவார்கள்? என்ன செய்வார்கள்?
ஐயாயிரம் பணம், வேட்டி, புடவை, பத்து கிலோ அரிசியை வாங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். விவசாயிகள் எதை விற்று, எப்படி கடன் வாங்கி விவசாயம் செய்திருந்தாலும் அரசு கொடுக்கிற ஐய்யாயிரம் நிவாரணத் தொகையை வாங்கிக் கொண்டால் அவர்களின் பிரச்சினை தீர்ந்து விடும் என நினைக்கிறார்களா?
மண்மேடாய் கிடக்கும் நிலத்தை சீர் செய்து விவசாயத்திற்கு தகுதியுடைய மண்ணாய் மாற்ற எவ்வளவு பணம், எவ்வளவு உழைப்பு தேவைப்படும்? இதற்கெல்லாம் அவர்கள் எங்கே போவார்கள்? அவ்வளவு காலம் வரை அவர்கள் என்ன செய்வார்கள்?
ஆண்டுக்கு 1400 கோடி வருமானம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம் கண்டுகொள்ளவேயில்லை. நம் அரசாங்கத்திற்கு மின்சாரம் வேண்டும். மத்திய அரசை பகைத்துக் கொள்ளவும் கூடாது. ஒருவேளை ஒரு கட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் இவர்களுக்காகக் கோரிக்கை வைத்தால் கொஞ்சம் பணம் தருவார்கள். அந்தப் பணமும் டாஸ்மாக் மூலம் அவர்களின் கல்லாவிற்குப் போய்விடும்.
இந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் உண்மையான நிலை புரிந்து போராடி கோரிக்கை வைக்க விவசாய சங்கங்களால்தான் முடியும். அந்த சங்கங்கள் நமது அரசியல் கட்சிகள் போலவே ஒற்றுமையில்லாமல் ஒவ்வொரு சங்கமும் ஒரு அரசியல் கட்சியை சார்ந்து இயங்குவதால் அதற்கு வழியுமில்லை. இவ்வளவு துயரங்களுக்குப் பிறகும் முப்பதுக்கும் மேலிருக்கும் விவசாய சங்கங்கள் கடலூர் மாவட்டத்தை கவனிக்கவும் இல்லை. அது தொடர்பாக எதையும் பேசவும் இல்லை.
ஏற்கெனவே என்ன நடக்குமோ என நடுங்கி நிற்கும் இம்மக்களுக்கு எப்பொழுதும் போல ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் உருவாகும் புயல் இவ்வாண்டும் உருவாகுமா என முன்கூட்டி அறிவித்து முன்னேற்பாடுகளைச் செய்யப் போகிறார்களா? எனத் தெரியவில்லை.
உலகத்தின் கவனமும், நம் ஊடகங்களின் கவனமும் இப்பொழுது சென்னைக்குத் திரும்பி விட்டபின் கடலூர் மாவட்டத்து மக்களை கவனிப்பாரில்லை. ஏற்கெனவே நிவாரணப் பொருட்களைப் பெற்றவர்களே மீண்டும், மீண்டும் பெறுகிறார்கள். யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. முறைப்படுத்திக் கொண்டு செல்வதும், சென்னையை கவனிப்பது போலவே அம்மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் போய்ச் சேரும்படி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் கவனத்தில் கொண்டு உடனே செயலாற்றுவது அவசியமாகிறது.
ஒவ்வொரு முறையும் சேதங்களையும், பாதிப்பையும், அழிவையும் எதிர்கொள்கிற கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணங்களை வழங்குவதால் தீர்வை எட்ட முடியாது. அம்மாவட்டத்திற்கு என தனியாக நிதி ஒதுக்கி வல்லுனர்களின் குழு ஒன்றை நியமித்து சிறப்புத் திட்டங்கள் தீட்டி நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும். அப்பொழுதுதான் அம்மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு அச்சமின்றி வாழ்வார்கள்.
நிவாரணப் பணம் வங்கிகளின் மூலம் சென்று சேர வேண்டும் என்பதாலோ, பணத்தின் அளவை உயர்த்திக் கொடுப்பதாலோ தீர்வு கிடைத்துவிடாது. மக்களின் மேல் உண்மையிலேயே அக்கறை இருப்பதாக சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் இந்நேரத்தில் உடனே செய்ய வேண்டியது நிவாரணங்கள் பெறுபவர்களின் பட்டியலைத் தயாரிப்பது அல்ல. டாஸ்மாக் கடையை இம்மக்கள் எழுந்து உட்காரும் வரை மூடி வைக்க உத்தரவிடுவதுதான். இதைத்தான் ஒரு மாதமாக படுக்க இடமின்றி ஈரத்திலேயே தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-       தங்கர் பச்சான்

thankartamil@gmail.com